எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல் காந்தி | காங். காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்!
எதிர்க்கட்சித்தலைவராக ராகுல்காந்தியை நியமிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் முடிவுக்கு பின்னர், காங்கிரஸ் காரிய கமிட்டி ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. 2 மக்களவை தேர்தல்களை அடுத்து காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளை வென்று எதிர்க்கட்சி அந்தஸ்த்து பெற்றுள்ளது.
இருந்தாலும் தோல்வி குறித்தும், காங்கிரஸ் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் (எதிர்க்கட்சி தலைவர்) யார் என்றும் விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் காரிய கமிட்டி தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்றார். காங்கிரஸ் கட்சியை நாடாளுமன்றத்தில் வழிநடத்தும் தலைவராக அவர் இருப்பார் என்றும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.