ஜோர்டான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி!
பிரதமர் மோடி இந்த வாரம் ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் முதலாவதாக, மன்னர் 2-ம் அப்துல்லா பின் அல் ஹுசைனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இன்று (டிச.15) டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஜோர்டான் புறப்பட்டார். இந்த பயணத்தின்போது ஜோர்டான் மன்னருடன் இருநாட்டு உறவுகள் குறித்து மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தொடர்ந்து நாளை (டிச.16) பிரதமர் மோடி எத்தியோப்பியா செல்கிறார்.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவிற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும். அந்நாட்டின் பிரதமர் அபிய் அகமது அலியை சந்தித்து பிரதமர் மோடி இந்தியா-எத்தியோப்பியா இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், 17-ம் தேதி பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு செல்ல உள்ளார்.
அந்நாட்டிற்கு பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் 2-வது சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது இந்தியா-ஓமன் இடையிலான வர்த்தகம், முதலீடுகள், இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.