மூதாட்டியை கொலை செய்த நபரை சுட்டுப் பிடித்த போலீசார்!
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள கூட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி என்ற மூதாட்டி. இவர் கணவர் ஏற்கெனவே உயிரிழந்தவிட்டார். இவரது பிள்ளைகளும் திருமணமாகி சென்றதை அடுத்து இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். கடந்த 20ம் தேதி மாலை, ஆடு மற்றும் மாடுகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்ற சரஸ்வதி வீடு திரும்பவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது உறவினர்கள் வனப்பகுதிக்குச் சென்று பார்த்தனர். அப்போது சரஸ்வதி அங்கு அடித்துக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது காது, மூக்கில் அணிந்திருந்த நகைகள் அறுக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்க விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தினர். நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளைக் கொண்டு சேலம் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருந்தனர். போலீசாரின் விசாரணையில் நரேஷ் குமார் என்பவர் மூதாட்டியை கொலை செய்தது உறுதிசெய்யப்பட்டது.
இவர் சங்ககிரி அருகே மலை அடிவாரத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நரேஷ் குமாரை பிடிக்கச் சென்றனர். அப்போது, நரேஷ் குமார் போலீசாரை நோக்கி கத்தியால் வெட்டியதாக தெரிகிறது. இதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன் மற்றும் காவலர் செல்வகுமார் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் அவரை கத்தியை போட்டு விட்டு சரணடைமாறு கூறினார்.
இருப்பினும் நரேஷ் குமார் கேட்காததால் காவல் ஆய்வாளர் அவரது வலது காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். நரேஷ் குமார் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு மல்லூர் பகுதியில் வயதான பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இவர் தனியாக வீட்டில் இருக்கும் மூதாட்டிகளையும், ஆடு மாடு மேய்க்கும் வயதான பெண்களையும் குறிவைத்து தாக்கி கொள்ளையடிக்கும் வழக்கம் கொண்டவர் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.