தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி - பி.எம். கிசான் திட்டத்தின் 21வது தவணை நிதி விடுவிப்பு
கோவை கொடிசியாவில், நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. தென்னிந்திய இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இம்மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி, கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவருக்கு தென்னிந்நிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் உழவர் சிலை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் இயற்கை முறை விவசாயிகள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு பிரதமர் மோடி விருது வழங்கி கெளரவித்தார்.
பின்னர் பிரதமர் மோடி நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.
இந்த விழாவில் ஆளுநர் ஆர்என்ரவி ,மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ,தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இராமசாமி, தமிழக அனைத்து உழவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பு உறுப்பினர் வாழை அ.ப.கருப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பிரதமர் மோடி, ஆந்திர மாநிலம் புட்டபருத்தியிலிருத்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அப்போது பிரதமரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக கொறடா எஸ்பி வேலுமணி, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, கொடிசியா சாலையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் திரண்டு நின்று பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கொடிசியா அரங்கம் வந்த பிரதமருக்கு விழா குழுவினர் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள இயற்கை வேளாண் பொருட்கள் கண்காட்சி அரங்கினை பிரதமர் திறந்து வைத்தார்.