“எந்த கட்சியாக இருந்தாலும் பொது இடங்களில் கட்சிக் கொடிகளை வைப்பதை ஏற்கமுடியாது” - மதுரை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவு!
திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் நாச்சியார் கோவில் குளக்கரை பகுதியில்
சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த
சிலை பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ பாதிப்பு இல்லாத வகையில் தான் உள்ளது. இருப்பினும் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியியல் பிரிவு அதிகாரிகள், எம்ஜிஆர் சிலை மற்றூம் அதன் அருகில் உள்ள கட்சிக்கொடியை அகற்றுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முத்துக்கிருஷ்ணன், அதிமுக கொடியை அகற்ற வழங்கிய நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் “எம்.ஜி.ஆர். சிலையை அகற்றக்கூடாது என அதிமுக சார்பிலும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மூன்று முறை முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் சிலையை தன்னிச்சையாக அகற்றக்கூடாது, எம்.ஜி.ஆர் சிலை அகற்றப்பட்டால் மக்கள் வருத்தமடைவார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி முன்பு இன்று(பிப்.20) விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள் “எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களின் தலைவர்களின் சிலைகள் கட்சி கொடிகளை சொந்த
அலுவலகத்தில் வைத்துக் கொள்ள வேண்டியது தானே?
பொது இடங்களில் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. இயக்கமாக இருந்தாலும் சரி. கட்டாயமாக அனுமதிக்க முடியாது. அதனால் இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய நேரிடும்” எனக் கூறினர். தொடர்ந்து மனுதாரர் தரப்பில் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை திரும்ப பெற அனுமதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.