பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிருத்தி மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!
அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி வேட்பாளர் ஜெயபிரகாஷ் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக கிருஷ்ணகிரி வேட்பாளர் ஜெயபிரகாஷ் இன்று (மார்ச்.31) ஓசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரணப்பள்ளி, சானமங்கலம், பலவணப்பள்ளி, மாத்தூர், முகலப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், கரணபள்ளி கிராமத்தில் இன்று காலை தேர்தல் பரப்புரையை துவங்கிய ஜெயபிரகாஷ், சானமங்கலம் கிராமத்தில் மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்தார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக மாட்டு வண்டியில் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளருக்கு கட்சி பொறுப்பாளர்கள் சால்வை அணிவித்தும், பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். இந்த தேர்தல் பரப்புரையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி, பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம். சதீஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.