”ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகள் அமைக்க அனுமதி”- டி.டி.வி தினகரன் கண்டனம்!
அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் ராமநாதபுரத்தில் ஹட்ரோ கார்பன் சோதனை கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”ராமநாதபுரத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதால் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் திமுக அரசின் திரைமறைவு வேலைகள் கடும் கண்டனத்திற்குரியது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைப்பதற்கான அனுமதியை தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. மாநில அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருக்கும் அனுமதியின் படி ராமநாதபுரம் மாவட்டம் தனிச்சியம், கீழ்செல்வனூர், பூக்குளம், வல்லக்குளம், அரியக்குடி உள்ளிட்ட 20 இடங்களில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் சோதனைக் கிணறுகளை அமைக்கும் பணிக்கு அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு ஹைட்ரோகார்பன் சோதனைக் கிணறுகளை அமைப்பதற்காக கடந்த மார்ச் மாதமே அனுமதி வழங்கிவிட்டு, அதனை மத்திய அரசின் புதிய அதிகாரப்பூர்வ சுற்றுச்சூழல்துறை இணையத்தில் பதிவேற்றாமல் பயன்பாட்டில் இல்லாத பழைய இணையதளத்தில் பதிவேற்றியிருப்பதன் மூலம் திமுக அரசின் தில்லுமுல்லு வேலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனவும், விவசாய பெருங்குடிகளையும், காவிரி படுகையையும் கண்ணை இமை காப்பது போல காப்போம் என வீரவசனம் பேசிவிட்டு திரை மறைவில் அதற்கான அனுமதியை கொடுத்திருப்பது விவசாயிகளுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, தமிழகத்தில் இனி எந்த விவசாயப் பகுதிகளிலும் இதுபோன்ற பணிகள் நடைபெறாத வகையில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.