“ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள்” - திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!
விலை ஏற்றத்தை கட்டுபடுத்த திமுக அரசை கண்டித்து போராட்டம் நடத்திய அதிமுகவினர் செய்யப்பட்டதற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, எனது அறிவுறுத்தலின்படி, தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், போராட்டத்தை தலைமையேற்ற அதிமுக மகளிர் அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, மாவட்டக் கழகச் செயலாளர் வேளச்சேரி M K அசோக் உள்ளிட்ட கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கைது செய்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
காவல்துறையிடம் உரிய அனுமதியைப் பெற்ற பிறகு, மேடை அமைத்த பிற்பாடு இடத்தை காவல்துறை மாற்றச் சொல்ல, அதற்கும் ஒப்புக்கொண்டு இடத்தை மாற்றி அதிமுக நடத்திய மக்களுக்கான ஒரு போராட்டத்தை அராஜகப் போக்குடன் எதற்கு ஒடுக்க வேண்டும்? எதிர்க்கட்சிகளோ, மக்கள் அமைப்புகளோ போராடவே கூடாது என முழுவதுமாக ஒடுக்கக் கூடிய ஒரு அரசை பாசிச அரசு என்று சொல்லாமல், வேறென்ன சொல்வது?
வெற்று விளம்பரங்களாலும், எதிர்க்குரல்களை ஒடுக்குவதாலும் தங்கள் ஆட்சி மீதான மாய பிம்பத்தை தக்க வைக்க திமுக நினைத்தால், அந்த எண்ணம் கானல் நீராய்ப் போவதை 2026 தேர்தல் காட்டும்! மக்கள் எண்ணமே எதிர்க்கட்சியின் குரல்! அதை ஒடுக்கும் ஆணவ அரசின் கொட்டத்தை மக்கள் நிச்சயம் அடக்குவார்கள். இது உறுதி”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.