"பாஜகவின் வாக்குத் திருட்டை தடுப்பதற்கு மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்" - திருமாவளவன்!
பீகார் தேர்தல் முடிவுகள் பாஜக மற்றும் தேர்தல் ஆணயம் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று விசிக தலைவர் திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக திருமாவளவன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றன. நேர்மையாக நடந்த தேர்தல்தானா என்கிற அய்யத்தை எழுப்புகிறது. பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தால் பெற்ற வெற்றியா? அல்லது அக்கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான கூட்டணி பலத்தால் கிடைத்த வெற்றியா? என்கிற கேள்வியை எழுப்புவதாக உள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட எஸ்.ஐ.ஆர் என்னும் நடவடிக்கைதான் இத்தகு அய்யங்களை எழுப்புவதற்கு அடிப்படையாக உள்ளது.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எதிராக வாக்களிக்ககூடிய வாக்காளர்கள் கணிசமான அளவில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதாவது, பீகாரில் தேர்தலுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட எஸ்.ஐ.ஆர் எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு' நடவடிக்கையின் போது தகுதி வாய்ந்த சுமார் 65 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.
ஆனால், எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. எனவே, அது தொடர்ந்து நடைபெற்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்பின்னும், சுமார் 47 இலட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு இருப்பதை எதிர்க் கட்சிகள் சுட்டிக் காட்டின. ஆயினும், அதனைத் தேர்தல் ஆணையம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்குப் பிறகு தேர்தல் நடைபெற்று வெளிவந்துள்ள முடிவுகள், எஸ்.ஐ.ஆர் மூலம் பெருமளவில் வாக்குகள் நீக்கப்பட்டதால்தான் பாஜக கூட்டணி இவ்வளவு இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது என்பதை உறுதிபட உணர்த்துகின்றன. பாஜக கூட்டணி வெற்றி பெற்ற 202 தொகுதிகளில் 128 தொகுதிகளில், நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கையை விட வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. அவ்வாக்குகள் நீக்கப்படாதிருந்தால் அத்தொகுதிகளில் 'காங்கிரஸ் - ஆர்ஜேடி' கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் என்பது உறுதியாகிறது.
இந்நிலையில், பீகாரில் செய்ததைப் போலவே தங்களுக்கு எதிரான லட்சக்கணக்கான வாக்குகளை நீக்கிவிட்டுத் தங்களுக்கு ஏற்றபடி தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு தமிழ்நாட்டிலும் பாஜக முயற்சிக்கலாம். பாஜகவின் இத்தகைய வாக்குத் திருட்டைத் தடுப்பதற்குத் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிய வந்திருப்பதால், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையை நிறுத்தும்படி உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை அளிக்கும் என்று நம்புகிறோம்.
இந்நிலையில், பீகாரில் நடந்தேறியுள்ளதைப்போல தமிழ்நாட்டிலும் தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படாமல் தடுக்க, சனநாயகத்தைப் பாதுகாக்க, பாஜக - தேர்தல் ஆணையம் இணைந்து அரகேற்றவுள்ள கூட்டுச் சதியை முறியடிக்க, அனைத்து ஜனநாயக சக்திகளும் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டும் என்றும்; மக்கள் நலன்கருதி தொலைநோக்குப் பார்வையோடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.