"கரூர் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது" - இபிஎஸ் பேட்டி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின், சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"சட்டப்பேரவையில் கரூர் விவகாரம் குறித்து முதலமைச்சர் விளக்கம் கொடுத்தார். தவெக தலைவர் விஜய் பேசும்போது செருப்பு வந்து விழுந்தது குறித்து அவர் எதுவுமே சொல்லவில்லை. இந்தக் கூட்டத்துக்கு திமுக அரசு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் உயிர்ப் பலியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், இந்த அரசு எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாகவும் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதியாகவும்தான் பார்க்கப்படுகிறது. கரூர் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பை காவல்துறை அளிக்காததாலும், இந்த அரசின் அலட்சியத்தாலும் 41 பேர் உயிரிழந்தனர்.
ஏற்கெனவே தவெக தலைவர் விஜய் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கலுக்கு பிறகுதான் கரூர் வந்தார். இதனால், ஏற்கெனவே நடந்த கூட்டத்துக்கு எவ்வளவு பேர் வந்தனர் என்பது காவல்துறை, உளவுத் துறை, அரசுக்கும் தெரியும். அதற்கேற்றவாறே இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும். அவர் கேட்ட இடத்தையும் ஒதுக்கவில்லை. மக்கள் பங்கேற்கும் அளவுக்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தால், உயிர் சேதத்தைத் தடுத்திருக்கலாம்.
அதனைச் செய்யவும் அரசு தவறி விட்டது. கரூர் பாதுகாப்புப் பணியில் 500 பேர் ஈடுபடுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் பார்த்தேன். ஆனால், அந்தக் கூட்டத்தில் 500 காவலர்கள் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக ஏடிஜிபி கூறினார். ஆனால், 600-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டதாக இன்று முதலமைச்சர் கூறுகிறார். இதிலேயே எவ்வளவு முரண்பாடு உள்ளது. இதனால்தான், இந்தச் சம்பவத்தில் அரசின் மீது மக்களுக்கு சந்தேகம் எழுகிறது’’
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.