"மிகப் பெரிய அபராதம் செலுத்த நேரிடும்" - கெஜ்ரிவாலை நீக்கக் கோரி மனு தாக்கல் செய்தவருக்கு டெல்லி நீதிமன்றம் எச்சரிக்கை!
அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரிய மனுதாரருக்கு மிகப் பெரிய அபராதம் செலுத்த நேரிடும் என டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது அவர் நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். கைது செய்யப்பட்டும் முதலமைச்சர் பதவியில் நீடித்து வரும் அவர், சிறையிலிருந்தவாரே பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டால் சாதாரண அரசு ஊழியர் கூட பதவி நீடிக்க முடியாது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் அரவிந்த கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சந்தீப் குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில், விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனு எனக் கூறிய நீதிபதி, இது போன்று வழக்குகளை தொடர்ந்தால் மிகப் பெரிய அபராதம் செலுத்த நேரிடும் என சந்தீப் குமார்க்கு நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.