"சரி என்றால் இரட்டை இலை... இல்லையென்றால் வாழை இலை..." - இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பேட்டி
சரி என்றால் இரட்டை இலை இல்லையென்றால் வாழை இலை என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள வஉசி நகரில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்ளுடன் அவர் கூறியதாவது:
"அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசியுள்ளேன். அது குறித்த தகவல் ஏதும் இல்லை. நான் இங்கே வேலூரில் நிற்கிறேன். சரி என்றால் இரட்டை இலை இல்லையென்றால் வாழை இலை. வாழை இலை போட்டு உட்கார்ந்து சாப்பிட வேண்டியதுதான். வாழை இலை உடம்புக்கு நல்லது, இரட்டை இலையும் உடம்புக்கு நல்லது. கறிவேப்பிலையாக மாறிவிடக்கூடாது. அதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
டிஜிட்டல் இந்தியாவில் வாக்கு எண்ணிக்கையை ஊற வைத்து ஊறுகாய் போட்டு 45 நாள்களுக்குப் பிறகு முடிவை அறிவிப்பார்கள். இதுதான் உலகத்திலேயே இல்லாத டிஜிட்டல் இந்தியா."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.