முதலமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!
பாஜகவில் கட்சியில் பல தலைவர்கள் உள்ளார்கள் எனவும், தனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை எனவும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“திமுக சட்டமன்ற உறுப்பினர் பல்லாவரம் கருணாநிதி மகன் மீது அவர் வீட்டில் வேலை செய்த பெண் புகார் தெரிவித்துள்ளார். சமூக நீதி பேசும் திமுகவினர் செய்கின்ற செயல் தான் இது. பிரதமர் எந்த அளவிற்கு தமிழ்நாடு மக்கள் மீது அன்பு வைத்துள்ளார்கள் என்பது அவர் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருவதிலே தெரிகிறது. பிரதமர் அயோத்திக்கு செல்வதற்கு முன்பு ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து விட்டு செல்கிறார். ராமரை பொருத்தவரை அனைவருக்கும் அவர் சமமானவர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள். ஆனால் தமிழ்நாட்டிற்கு விடுமுறை அளிப்பார்களோ, இல்லையோ ஆனால் மக்கள் மனப்பூர்வமாக கொண்டாடுவார்கள். திமுக பரிசு கொடுப்பது இராமயணம் புத்தகம். ஆனால் ஒரு பக்கம் கோயிலை இடிப்பார்கள். ராமர் கோயிலை பற்றி பேசுவதற்கு முன் உதயநிதி முதலில் வரலாற்றை தெரிந்து கொள்ளட்டும்.
ஆனால் என்னை பற்றி சொல்லும் கட்சிக்காரர்கள், அவர்கள் கட்சியில் அடுத்த தலைவர்களை அடையாளம் காட்ட முடியுமா. அவர்களை பொறுத்தவரையில் ஒரே தலைவரை மட்டுமே சுற்றி சுற்றி அடையாளம் காட்ட முடியும். அவர்களை பொறுத்தவரையில் ஒருவரை தூக்கி பிடித்து இவர் தான் என நாங்கள் சொல்லமாட்டோம். என்னை பொறுத்தவரை பல தலைவர்களை உருவாக்குவது.
பதவி ஆசை பிடித்த சில கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். என்னைவிட திறமையான முதலமைச்சர்கள் பதவிக்கு தகுதியான பல தலைவர்கள் பாஜகவில் உள்ளனர். அந்த கட்சியில் இவரை தவிர முதலமைச்சர் நாற்காலிக்கு பொறுத்தமானவர் என்று யாரவது சொல்ல முடியுமா.
ஒரு கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். முதலமைச்சர் வேட்பாளர் ஒருத்தர் தானா. புரியாதவர்களுக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. என்னதான் ஒருவரை தயார் செய்து, விளம்பரப்படுத்தி, போட்டிகள் நடத்தி, 42 கோடி செலவு செய்தாலும் செயற்கையாக தேர்ந்தெடுத்தாலும் இயற்கை ஏற்று கொள்ளாது. பாஜகவில் மக்களோடு மக்களாக நின்றவர்கள் தலைவர் ஆகிறார்கள்” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.