நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி - ஏமாற்றி பெற்ற நிலத்தை ஒப்படைப்பதாக மனவளக்கலை மன்றத்தினர் அறிவிப்பு!
நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக, மதுரையை சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற
பூரணத்திடம் மனவளக்கலை மன்றத்தினர் மோசடியாக பெற்ற 91 செண்ட் நிலம் திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்துள்ளனர்.
மதுரை யா.கொடிக்குளத்தை சேர்ந்த கல்விக்கொடையாளர் ஆயி அம்மாள் என்கிற பூரணம் தனது மகள் ஜனனி நினைவாக யா.கொடிக்குளத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியை
உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த 4 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன்றரை ஏக்கர்
நிலத்தை தானமாக வழங்கியதாக கூறப்பட்டது. அப்போது, ஆயி அம்மாள் என்கிற பூரணம் நியூஸ்7 தமிழுக்கு அளித்த பேட்டியில் "தனக்கு சொந்தமான 91 செண்ட் நிலத்தை மதுரை
மனவளக்கலை மன்றத்தினர் மோசடியாக பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
ஆயி அம்மாள் என்கிற பூரணம் 10 செண்ட் நிலம் மட்டுமே கொடுக்க சம்மதித்ததாகவும், ஆனால், மன்றத்தினர் 91 செண்டை பதிவு செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். இந்த செய்தியினை நியூஸ்7 தமிழ் வெளியிட்டது. இந்நிலையில், நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக வேதாத்திரி மகரிஷி மன்றத்தினர் 91 சென்ட் நிலத்தை ஆயி என்ற
பூரணத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும், மேலும் 19 ஆம் தேதி 91 செண்ட் நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுக்க உள்ளதாக பத்திரத்தின் மூலமாக ஒப்புதல்
அளித்துள்ளனர். மேலும், 2019 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல்
பத்திரத்தையும் அவரிடம் ஒப்படைத்தனர்.