2,545 ரேஷன் கடைகளுக்கு புதிய கட்டிடம் கட்டப்படும் - அமைச்சர் பெரியகருப்பன் பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, "கீழ் பென்னாத்தூர் தொகுதிகூடப்ட்ட துணை கிராமங்களில் நியாய விலைக்கடைகள் இல்லாத காரணத்தால் அத்தியாவசிய பொருட்களை வாங்க 2 கிலோமீட்டர் செல்ல வேண்டிய சூழல் இருப்பதால் தமிழகம் முழுவதும் துணை கிராமங்களில் பகுதிநேர நியாயவிலைக்கடைகள் அமைக்க அரசு முன்வரவேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், "திமுக ஆட்சி அமைந்த பின் இதுவரை 3000 திற்கும் அதிகமான நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை சபாநாயகர் பிச்சாண்டியின் கோரிக்கையும் பரிசீலக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், "சேதுபாவாசத்திரம்,கொளக்குடி ஊராட்சியில் முழுநேர நியாவிலைக்கடை கடைக்கு கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பேரவையில் பதிலளித்த அமைச்சர் பெரியகருப்பன், "தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்து 902 ரேசன் கடைகளில் 6 ஆயிரத்து 218 ரேசன் கடைகள் தனியார் மற்றும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 2 ஆயிரத்து 545 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே, அனைத்து கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும்" என்று பதில் அளித்துள்ளார்.