நாமக்கல் | காவிரியில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாய தாமரை - அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதி வழியாக செல்லும் காவிரி ஆற்றின் நீரில் தற்பொழுது ஆறு கிலோ மீட்டர் தூர அளவுக்கு ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் ஈரோடு, கரூர் மாவட்டங்கள் வழியாக டெல்டா மாவட்டங்களைச் சென்றடைகிறது.
காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் சாயக்கழிவு, தோல்கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் கலக்கிறது. போதாகுறைக்கு காவிரி ஆற்றின் பல பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் அதிகளவு முளைத்துள்ளன. தற்போது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆகாயத் தாமரைகளால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாசு படுவதோடு, மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கதவணைகளில் மின்சாரம் உற்பத்தி செய்வதிலும் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தியும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு இன்ன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் மாலை நேரத்தில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் அதிகமாக படையெடுத்து வருவதாகவும், அதிகளவு சூழ்ந்துள்ள ஆகாயத்தாமரையால் கழிவு நீர், சாய நீர் ஆகியவை தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் வயதானவர்கள்
மற்றும் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள்
தெரிவிக்கின்றனர்.
ஆகாயத்தாமரை அதிக நீர் இழப்பு செய்யக்கூடிய பாசி வகையாகும். இது வளர்ந்து வருவதால் ஆற்றில் மீன்வளம் குறையும். கழிவுகள் தேங்கி தண்ணீரை
மாசுப்படுத்தும். எனவே காவிரி ஆற்றில் வளர்ந்து வரும் ஆகாயத்தாமரைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.