“கூட்டணி உடைய வாய்ப்புள்ளதால் பாஜகவினர் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு” - பிரேமலதா விஜயகாந்த்!
தூத்துக்குடி விமான நிலையத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“ஜனவரி மாதம் கடலூரில் தேமுதிக மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து மிகப்பெரிய அறிவிப்பு இருக்கும். அமலாக்கத்துறை சோதனை நடப்பது புதிதல்ல. நிச்சயமாக யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவித்துதான் ஆக வேண்டும். மக்கள் வரிப்பணத்தை லஞ்சமாகவும், ஊழலாகவும் செய்தால் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆயிரம் ரூபாய் திட்டம் என மூளைச்சலவை செய்து பெண்களின் வாக்குகளை பெற்றுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகி உள்ளனர். இதனால் தான் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்கள் நடக்கிறது” என்றார்.
தொடர்ந்து பாஜகவினர், அதிமுகவினர் குறித்து விமர்சிக்க கூடாது என்று பாஜக மாநில தலைவர் நாகேந்திரன் தெரிவித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “கூட்டணி என்று அமைத்த பிறகு, அதற்குள் சலசலப்பு வந்து விட்டால் கூட்டணி பிரிய வாய்ப்பு உள்ளது. இதனால் கருத்துக்கள் சொல்வதை கட்டுப்படுத்துகின்றனர்” என தெரிவித்தார்.