மேகதாது விவகாரம் | சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!
மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை கடுமையாக எதிர்த்ததாக குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும், மேகதாது விவகாரத்தில் கடந்த ஆட்சியில் கடுமையாக எதிர்த்தோம் எனவும் கூறினார். மேலும், தான் எழுப்பிய கேள்விகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் பதிலளிக்கத் தயாராக இருந்தும் அதனைத் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தடுப்பதாகக் குற்றம் சாட்டினார். இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமியின் புகாருக்கு அவை முன்னர் துரைமுருகன் பதில் அளித்தார். அப்போது அவர், காவிரி ஆணையமே கூடாததால் அதிமுக ஆட்சியில் பிரச்சனை வரவில்லை என கூறினார்.
அமைச்சர் துரைமுருகன் பதில்:
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறியே காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது குறித்து விவாதித்தது. தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இதையடுத்து, மேகதாது விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் அளித்த பதிலில் திருப்தி இல்லை எனக்கூறி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
https://www.facebook.com/news7tamil/videos/1368653643838594/