அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான தேர்தல் முறைகேடு வழக்குகள்! ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான இரண்டு தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். அப்போது விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, பெருநாழி காவல் நிலையத்தில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதேபோல, தேர்தலின் போது வாக்களர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக கமுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி ராஜகண்ணப்பன் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில், இந்த வழக்குகள் அரசியல் ஆதாயத்துடன் தாக்கல் செய்யப்பட்ட பொய்யான வழக்குகள் என தெரிவிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.