மடப்புரம் காவலாளி விவகாரம் | ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடத்தை மாற்றிய தவெக!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீசார் கடுமையாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விசாரணை மரணம் என்பதால் இந்த வழக்கு தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கண்டனம் தெரிவித்த தவெக, இச்சம்பவம் தொடர்பாக சென்னையில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தது. இந்த நிலையில், கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான தேதி, இடம் மாற்றப்பட்டுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கண்டன ஆர்ப்பாட்டம் தேதி, இடம் மாற்றம்:
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை…
— N Anand (@BussyAnand) July 2, 2025
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கடந்த நான்கு ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர்நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இது குறித்துத் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும், கட்சித் தலைவர் விஜயின் உத்தரவின் பேரில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரப்பட்ட இடம் அன்றைய தேதியில் வேறு காரணத்திற்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி காவல் துறையால் அளிக்கப்பட்ட மாற்று இடத்தில் (சென்னை, சிவானந்தா சாலையில்) 06.07.2025 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை நம் கட்சித் தலைவர் விஜயின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்"
இவ்வாறு தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.