டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்ட லாரி ஓட்டுநர் அடித்து கொலை!
கோவை மாவட்டம், சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் (வயது 30) என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ஆறுமுகம் கடையில் உள்ள பொருட்களை மினி லாரி மூலம் வீடுகளுக்கு கொண்டு சென்று சப்ளை செய்யும் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் என்ற வாலிபரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடையின் மேல் தளத்தில் உள்ள அறையில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 25) இரவு இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது ஷியாம் அதிக சத்தத்துடன் டிவி பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் ஷியாமிடம் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சியாம் திடீரென காலி மது பாட்டிலை கொண்டு ஆறுமுகத்தின் தலை மற்றும் மார்பில் சரமாரியாக தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து ஆறுமுகத்தின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்திக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் உயிருக்கு போராடி கொண்டிருந்த
ஆறுமுகத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இன்று காலை 3 மணிக்கு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஷியாமை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.