For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவின் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு!

04:33 PM Mar 23, 2024 IST | Web Editor
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு  கவிதாவின் காவல் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
Advertisement

மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக, கவிதாவை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு 3 நாட்கள் அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு டெல்லி அரசு அமல்படுத்திய புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கின.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு சிபிஐ கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவாலுக்கும் பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்தார்.

சௌத் குரூப் நிறுவனத்திற்கு மதுபான உரிமம் வாங்குவதற்காக ரூ.100 கோடியை ஆம்ஆத்மி கட்சியின் தகவல் தொடர்பு பொறுப்பாளர் விஜய் நாயருக்கு வழங்கியதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த நிறுவனத்தில் அருண் ராமச்சந்திர பிள்ளை, அபிஷேக் போயினபள்ளி, தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா, முகுந்த ஸ்ரீனிவாசலு ரெட்டி, அவரது மகன் ராகவ் மகுண்டா, சரத் ரெட்டி ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர்.

இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவின் இல்லத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் பல முறை விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடந்த மார்ச் 15-ம் தேதி ஹைதராபாத்தில் கவிதாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு பின்னர் கவிதாவை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். 

இந்த வழக்கு தொடர்பாக கடந்த 16-ம் தேதி கவிதாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கும்படி அமலாக்கத்துறை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. ஆனால், 7 நாட்கள் மட்டும் அனுமதி அளித்த நீதிமன்றம், மார்ச் 23-ம் தேதி கவிதாவை ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக கவிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

7 நாட்கள் விசாரணை முடிந்து, கவிதா இன்று (மார்ச் 23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக கவிதாவிடம் மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அனுமதி அளிக்கும்படி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிமன்றம், 3 நாட்கள் கவிதாவை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.

இதையடுத்து, வெளியே அழைத்து வரப்பட்ட கவிதா செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியல் உள்நோக்கத்தோடு புனையப்பட்ட பொய்யான வழக்கு இது. அமலாக்கத்துறை என்னை சட்டவிரோதமாக கைது செய்துள்ளது. இதை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வேன். வழக்குத் தொடர்பாக கேட்ட கேள்விகளையே திரும்ப திரும்ப அமலாக்கத்துறை கேட்கிறது" என தெரிவித்தார்.

Tags :
Advertisement