"மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்" - திமுக எம்எல்ஏ பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை பிடித்தவுடன் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதில் ஒன்று தான் ‛விடியல் பயண திட்டம்'. இந்த திட்டத்தின் மூலமாக அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க முடியும். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல லட்சம் பெண்கள் தினமும் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் ‛விடியல் பயணம்' திட்டம் தொடர்பாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆண்டிபட்டியில் நேற்று அவர் பேசும்போது, ‛‛நாங்கள் ஆட்சிக்கு வந்தாச்சினா என்னென்ன சொன்னோம். மக்களே கஷ்டப்படாமல் 4 மணிவரை வேலை செய்யுங்கள். அதன்பிறகு ஓசியாக பஸ்சில் போங்க. தேனிக்கு போங்க.. ஆண்டிபட்டிக்கு போங்க.. உசிலம்பட்டிக்கு போங்க.. ஆம்பளை ஆளுங்க எல்லாம் வீட்டில் சோறாக்குங்கனு சொல்லிட்டு போனோம். இப்போ அதேமாதிரி போய் வறீங்களா?.
3 ஆண்டுகளாக எவ்வளவு வேலை நடந்து இருக்கு.. இப்போது இந்த ரோடு போடப்போகிறோம். இதில் பஸ் விடப்போகிறோம். அதிலும் ஓசியாக தான் ஏறிப்போகப்போறீங்க.. அன்னைக்கு என்ன சொல்ல போறீங்கனு தெரியலை'' என பேசினார். இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டம் தெரிவித்துள்ளார்.
கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. @MaharajanMla அவர்கள் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது.
இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் திரு. @KPonmudiMLA அவர்களும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி…
— Nainar Nagenthiran (@NainarBJP) June 12, 2025
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை "ஓசி" என்று திமுகவைச் சார்ந்த ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் விமர்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை "ஓசி" என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் "ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க" என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்ததும், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், "அம்மாவுக்கும் ரூ.1000, பொண்ணுக்கும் ரூ.1000" என சபை நாகரிகமன்றி விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும், பின் பயனாளிகளை "ஓசி" என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்! ஒவ்வொரு முறையும் பெண் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிபடுத்துவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்வதிலோ திமுக தலைவர்கள் காட்டாதது ஏன்? அதிகார மமதையில், எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்!"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.