ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு - அமித்ஷாவுக்கு கார்கே கடிதம்!
நடைபயணத்தின் போது, ராகுல் காந்திக்கும் அவரது குழுவினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய நீதி பயணம்’ கடந்த ஜன. 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. இந்த நடைப்பயணம் மொத்தம் 6,713 கி.மீ. தொலைவுக்கு மேற்கொள்ளப்பட உள்ளது. தொடர்ந்து 110 மாவட்டங்கள், 100 மக்களவைத் தொகுதிகள் வழியாக 67 நாள்கள் இப்பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நடைப் பயணம் மார்ச் 20-ம் தேதி மும்பையில் நிறைவடைய உள்ளது. மணிப்பூரை தொடர்ந்து அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாமுக்கு ராகுல் காந்தி நடைபயணம் வந்த போது அவர் வந்த பஸ்சை சுற்றி வளைத்த பாஜ தொண்டர்கள் ஜெய் ஸ்ரீராம், மோடி, என கோஷமிட்டனர். கைகளில் கம்புகளை வைத்திருந்த தொண்டர்கள் ஒற்றுமை யாத்திரைக்கு எதிராகவும் கூச்சலிட்டனர்.
அவர்களை தடுக்க முயன்ற அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபன் போராவை பாஜவினர் தாக்கினர். இதில், அவரது மூக்கு, வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த ராகுல் காந்தி உடனே பஸ்சில் இருந்து வெளியே இறங்கி அவர்களுடன் பேச வந்தார். பின்னர் பஸ்சில் ஏறிய அவர் அங்கு நின்ற பாஜவினரை பார்த்து பறக்கும் முத்தம் கொடுத்தார். இதன் பிறகு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் அசாம் மாநிலத்தில் உள்ள படாதிரவாதன் கோயிலுக்கு சென்ற ராகுல் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியை கோயிலுக்குள் அனுமதிக்காததால் போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு பல எதிர்ப்புகள் ராகுல் காந்திக்கு எதிராக அசாமில் எழுந்தது.
இந்நிலையில், இச்சம்பவங்களை குறிப்பிட்டு நடைபயணத்தின் போது ராகுல் காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது ;
நடைபயணத்தின் போது அசாமில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் குறிப்பிட்டு, அசாமில், காங்கிரஸுடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியின் வாகனம் அருகே வேண்டுமென்றே பாஜகவினரை அனுமதித்துள்ளனர். நடைபயணத்தின் போது, ராகுல் காந்திக்கும், அவரது குழுவினருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் உடனே தலையிட்டு அசாம் முதலமைச்சர் மற்றும் டிஜிபிக்கு தகுந்த உத்தரவை வழங்க வேண்டும் ” என அவர் குறிப்பிட்டுள்ளார்.