கொச்சி கப்பல் விபத்து தொடர்பான வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி முத்து, ஜஸ்டின் சுந்தர், சுசீலா, கார்மேல் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் அருகே எல்சா 3 என்ற சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானது. அந்த சரக்கு கப்பலில் 643 கண்டைனர்கள் இருந்த நிலையில் 54 கண்டைனர்கள் இதுவரை கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட கரையோரங்களில் ஒதுங்கியுள்ளன.
இதையும் படியுங்கள் : முருக பக்தர்கள் மாநாடு | வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு!
அவற்றில் கால்சியம், கார்பனேட் மற்றும் பிளாஸ்டிக் பெல்லெட்ஸ் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது கடலின் உணவுச் சங்கிலியில் கலப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இது உடல் நலனில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கேரளா அரசு, இதனை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. ஆகவே இவ்விபத்தை பேரிடராக அறிவித்து, கடலில் கலந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட அபாயமான பொருட்களை அகற்ற உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.