“மதுரக்காரனுக்கு கையே கத்திதான்” - பாகிஸ்தான் வீரரின் உலக சாதனையை முறியடித்த மதுரைக்காரர்!
30 வினாடிகளில் 29 நெருப்பு கான்கீரிட் கற்களை கைகளால் உடைத்து, பாகிஸ்தான் வீரரின் உலக சாதனையை முறியடித்துள்ளார் மதுரையை சேர்ந்த விஜய் நாராயணன்.
மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மென்பொருள் பொறியாளர் விஜய்
நாராயணன். இவர் டேக்வோண்டோ கலை மீதான ஈடுபாட்டால் தனது 23 வயதிலிருந்து தொடர்ந்து டேக்வாண்டோ கற்கத் தொடங்கியதோடு, டேக்வாண்டாவில் பல்வேறு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் டேக்வாண்டோவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் இதுவரை 32 கின்னஸ் சாதனைகளை இவர் நிகழ்த்தியுள்ளார்.
குறிப்பாக, 30வினாடிகளில் 11 கான்கிரீட் கற்களைத் ஜம்பிங் பேக் கிக் என்ற
முறையில் கால்களைப் பயன்படுத்தி உடைப்பது, ஒரு நிமிடத்தில் 37 கான்கீரிட்
கற்களை காலால் உடைப்பது, கைகளில் அதிக எடையை தூக்கி பஞ்ச் செய்வது,
ஆணிப்படுக்கையில் படுத்து உடலின் மீது கான்கீரிட் கற்களை உடைப்பது என பல டேக்வாண்டாவில் கலந்து கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கடைசியாக
இத்தாலியில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் 1நிமிடத்தில் 48 கான்கீரிட் கற்களை
உடைத்துள்ளார்.
இந்நிலையில், தனது 33வது கின்னஸ் உலக சாதனையாக 30 வினாடிகளில் 29 எரியும்
கான்கிரீட் கற்களை கைகளால் உடைத்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்
பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் என்பவர் 30 வினாடிகளில் 25 கான்கிரீட்
கற்களை உடைத்ததே உலக சாதனையாக இருந்தது. அதனை மதுரையை சேர்ந்த விஜய் நாராயணன் முறியடித்துள்ளார்.
இந்த உலக சாதனையை அங்கீகரித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பயிற்சியாளர்
நாராயணனை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌவுரவித்தது.