“திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது” - அமைச்சர் மனோ தங்கராஜ்!
கமல்ஹாசன்-மணிரத்னம் இருவருமே தமிழ் சினிமாவில் தங்களது துறையில் பெரிய உச்சத்தை எட்டியவர்கள். இவர்கள் கூட்டணியில் இன்று வெளியாகும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்தே கன்னடம் பிறந்ததாக தெரிவித்தார்.
இது தற்போது மொழிரீதியில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதற்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கண்டனம் தெரிவித்து, கமல்ஹாசன் மன்னிப்பு கோரினால்தான் தக் லைஃப் படத்தை கர்நாடகத்தில் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளனர். ஆனால் கமல்ஹாசன் திட்டவட்டமாக மன்னிப்புக் கோர மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் இந்த கருத்தை முன்வைத்து கர்நாடக உயர் நீதிமன்றமும் அவரிடம் பல கேள்விகளை எழுப்பியது. இதற்கிடையே கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது ஒரு மொழியை உயர்த்துவதற்காக மற்றொரு மொழி குறித்துப் பேசுவது தவறு எனவும், மன்னிப்புக் கேட்பதால் ஒருவர் குறைந்து போகமாட்டார்கள் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழை உயர்த்தி பேசினால் அனைத்து கட்சிகளும் கமலுக்கு ஆதரவு கொடுக்கும். ஆனால் அடுத்த மொழியோடு சம்பந்தப்படுத்தி பேசுவது சரியாக இருக்காது. தமிழை உயர்த்தி பேசினால் கமலுக்கு மட்டுமல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம் என தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,
“உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல பாஜக தலைவர்கள் தமிழ் மொழி குறித்து பொய்யான கருத்துகளைப் பேசும் போது, நயினார் நாகேந்திரன் கண்டிக்காதது ஏன்?. தமிழுக்கு பிச்சை போடுவது போல மத்திய அரசு நிதி ஒதுக்கும்போது எங்கே போனீர்கள்?.
கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும். கே.ஜி.எஃப், காந்தாரா போன்ற பல கன்னட திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் லாபம் ஈட்டியுள்ளன. இச்சூழலில் கமல்ஹாசனின் கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டுமே தவிர, வணிக ரீதியிலான மிரட்டல்கள் மக்களிடையே உணர்வுபூர்வமான பிரிவினைகளை வளர்க்கக் கூடும். தமிழ்நாட்டில் கன்னட படங்கள் மீது வெறுப்பு ஏற்படும் உணர்வை தூண்டி விடக்கூடாது.
சமஸ்கிருதம்தான் இந்தியாவின் ஆன்மா என 2019-ல் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பேசினார். சமஸ்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கு தாய் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வரலாற்று பொய்யை கூறிய போது வராத உணர்வு, கமல்ஹாசனின் கருத்துக்கு வருவதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. சமஸ்கிருத மொழியின் வேர்கள் ஈரான், சிரியா, துருக்கி போன்ற மத்திய ஆசிய பகுதிகளை சார்ந்தது என சில தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் பிறந்த மொழிகளின் அடிப்படையில் தமிழ் தான் மூத்த மொழி என்பது வரலாற்று உண்மை. இதை 2017-ல் பிரதமர் மோடியும் உறுதிபடுத்தியிருக்கிறார். கன்னடம், மலையாளம், போன்ற திராவிட மொழிகளில் தமிழின் தழுவலும், ஆதிக்கமும் இருப்பதை மூடி மறைக்க முடியாது. கன்னடம் தமிழில் இருந்து பிறக்கவில்லை, தனித்துவமானது என்பதற்கு கூட எந்த தரவுகளும் இல்லை.
திராவிட மொழிகளில் சமஸ்கிருத கலப்பு 8-ம் நூற்றாண்டிற்கு பின்பு திட்டமிடப்பட்ட சதி. இப்போதும் அதே சதியை மோடி அரசு அரங்கேற்ற முயலுவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். நடிகர் கமல்ஹாசன் கருத்தை அறிவுத்தளத்தில் விவாதிக்க வேண்டுமே தவிர, அரசியல் ஆயுதமாக மாற்றுவது அற்பத்தனமானது” என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.