For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பூப்பல்லக்கில் மதுரையிலிருந்து அழகர்மலை புறப்பட்டார் கள்ளழகர்!

11:06 AM Apr 26, 2024 IST | Web Editor
பூப்பல்லக்கில் மதுரையிலிருந்து அழகர்மலை புறப்பட்டார் கள்ளழகர்
Advertisement

சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர் மதுரையிலிருந்து
அழகர்மலைக்கு புறப்பட்டார். 

Advertisement

மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா முதல் நாள் ஏப்.19ல் காப்பு கட்டுதல், திருவீதி உலாவுடன் தொடங்கியது.  மூன்றாள் நாள் ஏப்.21-ஆம் தேதி மண்டூக முனிவருக்கு மோட்சம் அளிக்க சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடத்தில் கண்டாங்கி பட்டு உடுத்தி நேரிக்கம்புடன் தங்கப்பல்லக்கில் அழகர்மலையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து, ஏப்ரல் 23 ஆம் தேதி கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளினார்.  இதனை தொடர்ந்து இராமராயர் மண்டபத்தில் கள்ளழகருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையடுத்து 24 ஆம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் நிகழ்வும், 25 ஆம் தேதி தசாவதாரம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் 8 ஆம் நாள் நிகழ்வான கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு, இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. மல்லிகை, சம்மங்கி, ரோஜா, கனகாம்பரம், செவ்வந்தி, பச்சை ஆகிய பூக்களை கொண்டு
அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில், கள்ளழகர் இராமநாதபுரம் சேதுபதி மகாராஜா
சமஸ்தான மண்டபப்படியில் இருந்து புறப்பட்டார். தல்லாகுளம் கருப்பண்ணசாமி
கோயிலில் ஆசி பெற்ற கள்ளழகர் அழகர் மலையை நோக்கி புறப்பட்டார். அங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை தரிசனம் செய்தனர்.

முன்னதாக கள்ளழகருக்கு மஞ்சள், இளநீர், பால், தயிர், தேன், பழங்கள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது.  இன்று அதிகாலை புறப்பட்ட கள்ளழகர் நாளை காலை 10.32 மணி முதல் 12 மணிக்குள்ளாக தமது இருப்பிடமான அழகர் கோயிலை சென்றடைய உள்ளார்.

Tags :
Advertisement