கரூர் துயரம் : ”இறைவன் அருளுடன் கடந்து வருவோம்” - தவெக தலைவர் விஜய் கடிதம்..!
கடந்த மாதம் 27-ந்தேதி கரூரில் நடந்த தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று தவெக தலைவர் விஜய் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், ”கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம்.
சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே. நமது சந்திப்பிற்காக, அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.
இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.