“ஜகதீப் தன்கரின் கருத்து உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கும் வண்ணம் உள்ளது” - அமைச்சர் ரகுபதி!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் துறை சார்பில் 139 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் ஆட்சியர் அருணா ஆகியோர் வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி,
“2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் மீண்டும் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்பார். ஆகஸ்ட் 15ஆம் தேதி கோட்டையில் தேசிய கொடியையும் ஏற்றுவார். பாஜகவினர் கூறுவதை எல்லாம் நாங்கள் பொறுட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். மாநில சுயாட்சியை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வேண்டும். மத்திய அரசு எங்கள் மீது எந்த திட்டத்தையும் திணிக்க கூடாது. அரசியலமைப்புச் சட்டத்தில் பொதுப்பட்டியில் உள்ள கல்வி உள்ளிட்டவைகளை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
எங்களைக் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை தான் மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைக்கிறார்.
மத்திய அரசின் கீழ் உள்ள பட்டியலை நாங்கள் குறிப்பிடவில்லை. ஆனால்
பொதுப்பட்டியலில் உள்ளவற்றை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அப்போது மாநில அரசை கலந்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும். அதுதான் மாநில சுயாட்சி என்பது.
ஆளுநர் விவகாரம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த ஒன்பது
நாட்களுக்குப் பிறகு துணை குடியரசு தலைவர் விழித்துக் கொண்டு ஒரு உரையை
ஆற்றியுள்ளார். அதன் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வக்ஃபு திருத்த சட்டத்திற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த அன்று தான் துணை குடியரசுத் தலைவர் இதுபோன்ற பேச்சை பேசுகிறார்.
இந்தப் பேச்சு உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கும் வண்ணமோ, பயமுறுத்தும் வண்ணமோ உள்ளது. பாஜக சார்பில் தான் இந்த உரையை ஆற்ற வேண்டும் என்று துணை குடியரசு தலைவருக்கு கூறியுள்ளனர். துணை குடியரசு தலைவர் பேசியுள்ளது உச்ச நீதிமன்றத்திற்கு அளித்திருக்கக்கூடிய எச்சரிக்கை மணி.
நாங்கள் சொல்வதைக் கேட்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை தான் துணை குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட வழக்குகளில் 142 பிரிவின் கீழ் தான் உச்ச நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.
நீட் தேர்வு தொடர்பாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிந்து தீர்ப்பு கூறிய பிறகுதான் விமர்சனத்தை வைக்க வேண்டும். ஆனால் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே கடுமையான விமர்சனத்தை வைப்பது என்பது தவறானது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பாஜகவோடு கூட்டணி
கிடையாது என்று கூறினார். ஆனால் தற்போது பயத்தின் காரணமாக பாஜகவோடு
கூட்டணி வைத்துள்ளார். இதுகுறித்து தான் நாங்கள் விமர்சனம் செய்தோமே தவிர அவர்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. 2026 திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும்.
200 என்ற இலக்கோடு வெற்றி பெறுவோம். கூட்டணி குறித்து கருத்து சொல்ல எனக்கு உரிமை கிடையாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் கூட்டணி குறித்து முடிவு செய்வார்.