"தற்கால தலைவர்களை காமராஜரோடு ஒப்பிடுவது சரியல்ல" - அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம்!
காமராஜருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குப்பச்சிபாறை பஞ்சாயத்துகுட்பட்ட லக்கபத்தனபள்ளி
கிராமத்தில் உள்ள படேதலாவ் பெரிய ஏரியின் கால்வாயில் 57 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறு பாலம் மற்றும் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த
நிகழ்ச்சியில் அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனஹள்ளி சட்டமன்ற
உறுப்பினருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.
பின்னர்,கே.பி.முனுசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"பிரதமர் மோடி மட்டும் இல்லை தற்கால தலைவர்கள் யாரையும் காமராஜர் உடன் ஒப்பிட்டு பேச முடியாது. காரணம் காமராஜர் மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்பணித்த கர்ம வீரர், இவருடன் தற்போதைய தலைவர்களை ஒப்பிட்டு பேசுவது சரியாக இருக்காது.
அண்ணாமலை உத்தரப்பிரதேசத்தில் 33 லட்சம் கோடியும், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் கோடியும் முதலீடு வந்துள்ளதை ஒப்பிட்டு பேசியுள்ளார். பிரதமர் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே தேர்தல் என பேசுகிறார். எல்லா மாநிலத்திலும் அந்த முதலமைச்சர்கள் நடத்துகிற மாநாட்டில் பிரதமர் கலந்துகொண்டு அந்த மாநிலத்தில் முதலீடு செய்யுங்கள். இது பாதுகாப்பான மாநிலம் என கூறி இருந்தால் அண்ணாமலை கருத்தை வரவேற்பேன்.
மாறாக பிரதமர் குஜராத்துக்கு அங்கு தொழில் முனைவோரை அழைத்து பேசுகிறார். நாட்டின் பிரதமர் அவரது சொந்த மண்னிர்க்கு சென்று சிறிய வட்டத்திற்குள் இருக்கிறார். இந்த சூழலில் தமிழ்நாட்டை பற்றி விமர்சனம் செய்ய அண்ணாமலைக்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை.
பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வு துறை, விவசாயம், கல்விதுறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலம் என மத்திய அரசே பாராட்டி உள்ளது. அதை மறைத்து அண்ணாமலை செல்லும் இடங்களில் தான்தோன்றி தனமாக பேசி விமர்சனம் செய்வது நாகரீகமான அரசியல் இல்லை"
இவ்வாறு அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.