"இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது முற்றிலும் தவறு" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், "இந்தி நம் நாட்டின் தேசிய மொழி என்றும் அதனை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்றும் பாஜகவினரும் அவர்களின் கொள்கை வழி அமைப்பினரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற மக்களவையின் தலைவர் ஓம் பிர்லா சமஸ்கிருதம் தான் பாரதத்தின் மூலமொழி என்று அவையிலேயே குறிப்பிடுகிறார். இவை இரண்டுமே தவறான பரப்புரையாகும்.
இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிதான் இந்தி. அத்துடன் ஆங்கிலமும் இணையலுவல் மொழியாக இருக்கிறது. இந்திதான் தேசிய மொழி என்பது முற்றிலும் தவறானது. இந்திய ஒன்றியம் என்பதே பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களைக் கொண்டதாகும். இதனை இந்திய விடுதலைக்கு முன்பே காந்தியடிகள் நன்கு உணர்ந்திருந்தார்.
அதனால் தான் மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அந்தந்த மாநிலத் தாய்மொழிகளின் பெயரில் அமைத்தார். இந்தியா விடுதலையடைந்த பிறகு, பிரதமர் ஜவகர்லால் நேரு தலைமையில் அமைந்திருந்த மத்திய அரசு, மாகாணங்களை மொழிவழி மாநிலங்களாகப் பிரிப்பதற்காக மாநில புனரமைப்புக் குழுவினை அமைத்தது. அந்தக் குழுவிடம் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தனது கருத்துகளை அளித்தது.
அதில், “மொழிவழிப் பிரிவினையை திமுக பாராட்டுகிறது. மொழிவழி அமையும் ஒவ்வொரு மாநிலமும் அதன் முழு அதிகாரத்துடனும் செயல்பட வேண்டும். நாடு என்பது கூட்டரசாக செயல்பட வேண்டும். சென்னை ராஜ்ஜியம் ஏற்கனவே இருந்தபடி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி வழிப் பிரிவாக அமைப்பதுதான் உடனடித் தேவை. இதனைச் செய்யும்போது, எந்தவொரு மொழிப்பிரிவும் மற்றொரு மொழிப் பிரிவின் நிலப் பரப்பை அபகரித்துக் கொள்ளாதவாறு அதிகாரத்தில் உள்ளோர் முழுக் கவனம் செலுத்த வேண்டும்.
ராஜ்ஜியங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டியது நிலப்பரப்பைப் பொறுத்து மட்டுமல்ல, ராஜ்ஜியங்களுக்கு ஒதுக்கப்படும் அதிகாரங்களைப் பொறுத்தும் மாறுதல் வேண்டும் என்பதைத் திமுக வற்புறுத்துகிறது” என்று கருத்துருவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்றைய ஆட்சியாளர்களில் சிலர் ‘தட்சிணப் பிரதேசம்’ என்ற பெயரில் தென்னிந்திய மாநிலங்களை ஒரே அமைப்பாக்கிட முயற்சி செய்தபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தது திமுக. தென்னிந்தியாவிற்குட்பட்ட நிலப்பரப்பை மொழிவழி மாநிலங்களாகத்தான் பிரிக்கவேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருந்தது. பண்டிதர் நேரு தலைமையிலான அரசு தென்னிந்தியாவை மட்டுமல்ல, வடஇந்தியப் பகுதிகளிலும் மொழிவழி மாநிலங்களை உருவாக்கியது. இந்தியா ஒற்றை மொழி பேசும் நாடு அல்ல. அது, பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களைக் கொண்ட ஒன்றியம் என்பதை நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர்களும், ஆட்சியிலிருந்த பண்டிதர் நேரு போன்ற பெருமகன்களும் உணர்ந்து செயல்பட்டனர்.
மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய்மொழி ஆட்சி மொழியாக உள்ளது. அவையும் இந்த தேசத்தின் மொழிகள்தான். அவற்றையும் தேசிய மொழிகள் என்ற அடிப்படையில் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளாக - அலுவல் மொழிகளாக ஆக்கிட வேண்டும் என்பதை திமுக நெடுங்காலமாக வலியுறுத்தி வருகிறது.
1965ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் உரையாற்றிய பேரறிஞர் அண்ணா “இந்தியாவில் 100க்கு 40 பேர் இந்தி பேசுவதாகக்கூறி, அதனால் அதைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்கிறார்கள். 40 சதவிகிதம் பேர் என்பதை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், இந்தி ஒரு பகுதியில் உள்ள மக்களால் பேசப்படுகிறதேயன்றி, இந்தியா முழுவதும் பரவலாகப் பேசப்படவில்லை. ஒரு பகுதியில் பெரும்பான்மையினரால் பேசப்படுவது, நாடு முழுவதும் ஆட்சி மொழியாவதற்கானத் தகுதியைப் பெற்று விடாது.
மொழிப்பிரச்சினையில் திமுகவின் கொள்கை என்னவென்றால், இந்தியாவில் முக்கிய மொழிகளாக உள்ள 14 மொழிகளும் தேசிய மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆட்சிமொழிகளாகும் தகுதி தரப்படவேண்டும்” என்று வாதாடினார்.
‘‘தி.மு.க.வின் நோக்கம் இந்தியை எதிர்ப்பதல்ல, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு சமமான அங்கீகாரம் வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழிகளாக - அலுவல் மொழிகளாக அனைத்து மொழிகளுக்கும் இட மளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்கள். மாநிலங்களவை உறுப்பினராக அண்ணா இருந்த காலத்தில் எட்டாவது அட்டவணையில் 14 மொழிகள் இருந்தன. தற்போது அது 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சில மொழிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெறக் காத்திருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இந்தியாவின் தேசிய மொழிகள்தான்.
இந்தி மட்டுமே தேசிய மொழி என்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடு. சமஸ்கிருதமே இந்தியாவின் மூல மொழி என்பது நம்மை அடிமையாக்கும் முயற்சி. மூலமொழி என்றால் அதிலிருந்துதான் மற்ற மொழிகள் தோன்ற முடியும். அதாவது, இந்தியாவில் உள்ள அத்தனை மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து உருவானது என நிறுவப் பார்க்கிறார்கள். தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் தனித்தன்மை கொண்டவை என்பதை ஏறத்தாழ 175 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வுப்பூர்வமாக உலகத்திற்கு அறியச் செய்தவர் கால்டுவெல். இதனை 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின்போது வெளியிட்ட அறிக்கையில் கலைஞர் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
‘‘தமிழ்மொழி செம்மொழியென முதல் குரல் கொடுத்த தமிழர் பரிதிமாற்கலைஞர் என்றால், தமிழ்மொழி செம்மொழியென்று முதலில் சொன்ன வெளிநாட்டவர் ராபர்ட் கால்டுவெல் ஆவார். பரிதிமாற் கலைஞர் தமிழ்மொழி செம்மொழியென 1887-ம் ஆண்டு குரல் கொடுத்ததற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே, 1856ம் ஆண்டு அறிஞர் கால்டுவெல் தாம் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற ஒப்புவமை காண்பித்திட இயலாத, உயர்பெரும் நூலில், ‘திராவிட மொழிகள் அனைத்திலும் உயர்தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருதச் சொற்களை அறவே ஒழித்துவிட்டு உயிர் வாழ்வதோடு, அவற்றின் துணையை ஒரு சிறிதும் வேண்டாமல் வளம் பெற்று வளர்வதும் இயலும்.
செந்தமிழ் என்றும் தனித்தமிழ் என்றும் சிறப்பிக்கப் பெறுவதும், பெரும்பாலும் அம்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் எழுதப் பயன்படுவதுமாகிய பழந்தமிழ் அல்லது இயல்தமிழ், மிக மிகக் குறைந்த சமஸ்கிருதத் தொடர்பையே பெற்றுள்ளது. சமஸ்கிருதச் சொற்களையும் எழுத்துகளையும் மேற்கொள்வதை வெறுத்து ஒதுக்கிவிட்டு, பழந்திராவிட தனிச்சிறப்பு வாய்ந்த மூலங்கள், சொல்லுருவங்கள், ஒலி முறைகளை மட்டும் மேற்கொள்வதில் காட்டும் ஆர்வத்தையும் விழிப்புணர்ச்சி யையும் விடாமல் மேற்கொண்டிருப்பதினாலேயே அச்செந்தமிழ், தன் மொழியின் உரைநடை, பேச்சு நடைகளோடு சிறப்பாக வேறுபடுகிறது என்று தமிழ்மொழி செம்மொழியே என நிரூபித்துக் காட்டினார்” என கருணாநிதி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஐரோப்பிய இனத்தவர் என்று சொல்லி அவருடைய கருத்துகளை வெறுக்கும் கூட்டத்தாரால், சூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரைத் தனித்தமிழில் பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டு தமிழ்த் தொண்டாற்றி, உயர்தனிச் செம்மொழி எனப் போற்றிய அறிஞரின் ஆய்வுகளை ஒதுக்க முடியுமா? நாகர்கள்- திராவிடர்கள் என்ற ஆய்வின் அடிப்படையில் அண்ணல் அம்பேத்கர் திராவிட மொழியே தமிழ் என்பதையும், ஆதிக்க மொழிகளிடமிருந்து அது தன்னைக் காத்துக் கொண்டதையும் விளக்கியிருப்பதைப் புறக்கணிக்க முடியுமா?
சமஸ்கிருதம்தான் இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி என்று சொன்ன சங்கராச்சாரியார் அப்படியென்றால் தமிழ்தான் தந்தை மொழி என்ற வள்ளலாரின் வாதத்தை இந்தக் கூட்டத்தார் மறுப்பார்களா? ஐராவதம் மகாதேவன் தொடங்கி உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் வரை பலரும் அகழாய்வு, செப்பேடு, கல்வெட்டு, ஊர்ப்பெயர்கள் என எல்லா ஆய்வுகளிலும் காலம் காலமாக தமிழ் மொழி தனித்து இயங்கும் தன்மைகொண்டது என நிரூபித்திருப்பதை மறுக்க முடியுமா?
தமிழ் மீது பிரதமர் மோடி மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், மாநில மொழிகளின் வளர்ச்சிக்காகத்தான் மும்மொழிப் பாடத்திட்டத்தை வலியுறுத்துகிறோம் என்றும் சொல்கின்ற பாஜக வினர் தங்கள் ஆட்சியில் தமிழுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார்கள்? சமஸ்கிருதத்திற்கு எவ்வளவு நிதி
ஒதுக்கியிருக்கிறார்கள்? என்ற வேறுபாடே, அவர்கள் தமிழ்ப் பகைவர்கள் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டிவிடும்.
மத்திய கல்வி அமைச்சகத்திடமிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில் மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம், தேசிய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2ஆயிரத்து 435 கோடி. இதே காலகட்டத்தில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியது ரூ.167 கோடி மட்டுமே. சமஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்டதில் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு செலவிடப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்திற்கும் இந்திக்கும் முன்பைவிட பல மடங்கு பணம் ஒதுக்கப்பட்டு, செலவிடப்பட்டு வருகிறது. ஓட்டுக்காக உதட்டளவில் தமிழை உச்சரித்து, உள்ளமெங்கும் ஆதிக்க மொழியுணர்வு கொண்டு செயல்படுகிறது மத்திய அரசு. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளைப் பேசுபவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்த முயற்சிக்கிறது.
If the BJP’s claim that our Hon'ble PM has great love for Tamil is true, why is it never reflected in action?
🎯Rather than installing Sengol in Parliament, uninstall Hindi from Union Government offices in Tamil Nadu. Instead of hollow praise, make Tamil an official language on… pic.twitter.com/4Yppzj1N4N
— M.K.Stalin (@mkstalin) March 5, 2025
தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தராமல் வஞ்சிப்பது போலவே தமிழுக்குரிய நிதியையும் ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழைப் போலவே இந்தியாவின் பிற மாநில மொழிகளையும் ஆதிக்க மொழிகளைக் கொண்டு அழிக்கத் துடிக்கிறது. மொழித் திணிப்பு ஒரு நாட்டில் எத்தகைய
விளைவுகளை உண்டாக்கும் என்பதை உலக சரித்திரத்தைப் புரட்டினால் புரிந்து கொள்ளலாம்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.