"விசிக, பாமக ஒரே கூட்டணியில் இருப்பதுதான் நல்லது" - செல்வப்பெருந்தகை பேட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் சமூக நீதிக்காக போராடுபவர்கள் மீது பாசமும், மதிப்பும் இருக்கும். மரியாதை நிமித்தமாக மட்டுமே பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தேன். அதனை அன்புமணி ராமதாஸ் விமர்சிப்பது வருத்தமாக உள்ளது. சமூகநீதிக்காக போராடிய ராமதாஸை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சந்திக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறுவார் என்றுதான் எதிர்பார்த்தேன். எங்களுக்கு ராமதாஸ் மீது உண்மையான அன்பு உள்ளது. முன்னதாக பாமக கட்சி காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றது. அந்த கூட்டணியில் இருக்கும்போது தான் அன்புமணி ராமதாஸ் மருத்துவ மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக ஆனார்.
ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து அன்புமணி ராமதாஸ் பேசியதை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ராமதாஸை சந்திப்பதில் எங்களுக்கு என்ன அரசியல் இருக்கிறது? இந்தியா கூட்டணி தற்போது வலிமையாக உள்ளது. கூட்டணியில் இருப்பவர்கள் எங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலை விட வரும் 2026 தேர்தலில் 200 தொகுதிகளை பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக மக்கள் சொல்கிறார்கள். இந்த சூழலில் ராமதாஸை அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே அரசியல் என்றால் மனிதநேயம், நட்புணர்வு எங்கே இருக்கும்? மனிதநேயம், நட்புணர்வு குறித்து தெரியாதவர்கள் இதுகுறித்து பேசக்கூடாது.
ராமதாஸின் பல மாநாடு, போராட்டங்களில் நான் கலந்துக்கொண்டுள்ளேன். போராட்டத்தின் போது கைதும் செய்யப்பட்டுள்ளேன். இதுகுறித்து ராமதாசுக்கு தெரியும். ஆனால் அன்புமணி ராமதாசுக்கு தெரிந்திருக்கு வாய்ப்பு இல்லை. அவர் அப்போது படித்துக்கொண்டிருப்பார், இல்லையென்றால் இளைஞராக இருந்திருப்பார். இந்த சந்திப்பு திமுக சூழ்ச்சியினால் நடந்ததாக சொல்லப்படுகிறது. திமுக சூழ்ச்சி செய்ய வேண்டிய அவசியம் என்ன? அன்புமணி ராமதாஸ் மிகவும் நல்ல மனிதர். ஆனால் அவர் இருக்கும் இடம் சரியில்லை. விசிக, பாமக கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்தால்தான் இரண்டு சமூகத்தினருக்கும் நல்லது"
இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.