இருசக்கர வாகனங்களுக்கு சுங்க கட்டணமா? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்!
இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கு ஜூலை 15-ம் தேதி முதல் சுங்க சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டு என்ற நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு அரசு சுங்க வரி விதிக்கப் போவதாக வெளியான செய்தி உண்மையல்ல என மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"இருசக்கர வாகனங்களுக்கு சுங்க வரி விதிக்க இருப்பதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளைப் பரப்புகின்றன. அத்தகைய முடிவு எதுவும் முன்மொழியப்படவில்லை. இருசக்கர வாகனங்களுக்கு முழுமையான வரி விலக்கு தொடரும். உண்மை தெரியாமல் தவறான செய்திகளைப் பரப்புவதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்துவது ஆரோக்கியமான ஊடக அறம் அல்ல.
இதை நான் கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதேபோல், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இருசக்கர வாகனங்களுக்கு சுங்கவரி விதிக்கும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.