"புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்?" - நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, முறையான கட்டிடங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு படிக்கும் மாணவர்கள் 7 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி, திமுக அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு சான்று. திமுக அரசின் அவல ஆட்சியில் நமது சட்டம், ஒழுங்கின் வலிமையானத் தூண்களான வருங்கால வழக்கறிஞர்களும், நீதியரசர்களும் இப்படி நீதி கேட்டு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது.
சென்னை தரமணியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் கழிவறை, முறையான கட்டிடங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அங்கு படிக்கும் மாணவர்கள் 7 மணி நேரமாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள காணொளி, @arivalayam அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு… pic.twitter.com/71tZLeFQz0
— Nainar Nagenthiran (@NainarBJP) June 25, 2025
“சட்டக் கல்லூரிகளில் நிரந்தர இணை பேராசிரியர்களை நியமிக்க முடியாவிடில் அரசு அவற்றை இழுத்து மூடி விடலாம்” என சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த போதும் தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் அரசு ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன்? ஒவ்வொரு ஆண்டும் இத்தனை புதிய கல்லூரிகளைத் திறக்கிறோம் என விளம்பரப்படுத்தினால் மட்டும் போதுமா? அடிப்படை வசதிகளும் கற்பிக்க ஆசிரியர்களும் அற்ற வெற்று கட்டிடங்களால் யாருக்கு என்ன பயன்?
எனவே, கல்விக் கூடங்களில் அடிப்படை வசதிகளைக் கூட செய்து தர முடியாத திமுக அரசின் அலட்சியத்தால் படிக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும் அபாயம் உள்ளது என்பதை உணர்ந்து, வெறும் விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சற்று ஆட்சி நிர்வாகத்திலும் கவனம் செலுத்தி தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.