"திமுக பாலியல் குற்றவாளிகளின் பாதுகாப்பு கவசமா?" - நயினார் நாகேந்திரன் கண்டனம்
விழுப்புரத்தில் பெண் ஒருவர் தொடர் பாலியல் வன்கொடுகைக்கு ஆளான சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது,
"விழுப்புரம் மத்திய மாவட்டத் திமுக ஒன்றியச் செயலாளரான திருவக்கரை பாஸ்கரன் என்பவர் கடந்த ஆறு மாதங்களாகத் தன்னை மிரட்டி, பலவந்தமாகத் தனக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ள காணொளி காண்போரைப் பதற வைக்கிறது. தமிழகப் பெண்களை வேட்டையாடுவதையே வழக்கமாய் வைத்துள்ள திமுக நிர்வாகிகளின் கோரமுகத்தையே இச்சம்பவம் நமக்கு மீண்டுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
“தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்” என்ற கதையாக, திமுககாரன் என்பதே குற்றம் செய்வதற்கான அடையாள அட்டையாக மாறிவிட்டது. ரவுடியிசம், போதைப்பொருள் கடத்தல், மணல் கடத்தல், கள்ளச்சாராய விற்பனை உள்ளிட்ட அனைத்து சட்டவிரோத செயல்பாடுகளிலும் கொடிகட்டிப் பறக்கும் திமுக நிர்வாகிகள், ஆட்சி கையிலிருக்கும் மமதையில் தமிழகப் பெண்களையும் தேடித்தேடி சீரழிப்பதை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது.
காலங்காலமாக பெண்களை மட்டம் தட்டுவதையும், இரட்டை அர்த்த வசனங்களையும் ரசிக்கும் ஒரு கூட்டத்திடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தால் என்னவாகும் என்பதைத் தமிழக மக்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள், செய்த பாவத்திற்குப் பரிகாரம் செய்வதற்காக வரும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி தவம் கிடக்கிறார்கள். திமுக அரசு அதன் ஆணவத்தாலேயே வீழப்போவது உறுதி"
இவ்வாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.