ஐபிஎல் | தனி ஆளாக ஆட்டத்தை மாற்றிய கே.எல்.ராகுல்... பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி அணி!
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த களமிறங்கிய பெங்களூரு அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் 37 ரன்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி போட்டிங்கில் களம் கண்டது.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய டூ பிளஸ்சிஸ் 2 ரன்னிலும், ஜாக் 7 ரன்களிலும் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய அபிஷேக் போரல் 7 ரன்களிலும், அக்சர் பட்டேல் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக கே.எல்.ராகுலுடன், ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தது.
இறுதியில் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. கே.எல்.ராகுல் 93 ரன்களுடனும், ஸ்டப்ஸ் 38 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், யாஸ் தயாள் மற்றும் சுயாஸ் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.