For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சுதந்திர தின தேநீர் விருந்து - திமுக, தவெக புறக்கணிப்பு, அதிமுக - பாஜக பங்கேற்பு!

ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
06:48 PM Aug 15, 2025 IST | Web Editor
ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சுதந்திர தின தேநீர் விருந்து   திமுக  தவெக புறக்கணிப்பு  அதிமுக   பாஜக பங்கேற்பு
Advertisement

Advertisement

நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.

இந்த தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்தது. முதலமைச்சர், அமைச்சர்கள் என யாரும் பங்கேற்கவில்லை. ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து அரசின் அதிருப்தியே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த விருந்தில் கலந்துகொள்ளவில்லை. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தது. இது, கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

அதிமுக, பாஜக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இந்த விருந்தில் பங்கேற்றன. பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்.பி. இன்பதுரை, எம்.எல்.ஏ. கே.ஏ. பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர். தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பாமக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் சதாசிவம், வெங்கடேசன், சிவக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மகேந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்தார்.

தேசிய கீதத்துடன் தொடங்கிய இந்த விழாவில் பரதநாட்டியம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆளுநர் ஆர்.என். ரவி, இந்த விருந்தில் பங்கேற்றவர்களையும், அண்ணா பல்கலைக்கழகத்தினரையும் கௌரவித்தார். தேசிய கீதம் மீண்டும் இசைக்கப்பட்டு, நிகழ்வு நிறைவடைந்தது. இந்த தேநீர் விருந்து, அரசியல் ரீதியாக பல விவாதங்களுக்கு வழிவகுத்தாலும், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் ஒரு மரபு சார்ந்த நிகழ்வாக அமைந்தது.

Tags :
Advertisement