அரசு பேருந்து ஓட்டுநரை காலணியால் அடித்த சம்பவம் - துணை மேலாளர் மீது பாய்ந்த நடவடிக்கை!
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர் , கோயம்புத்தூர்,
சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று(ஜூன்.09) பக்ரீத் விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக பயணிகள் ஏராளமானோர் அரசு பேருந்துகளில் புறப்பட்டு சென்ற போது மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பேருந்து ஆரப்பாளையம் ரவுண்டானா அருகே பயணிகளை ஏற்றியவாறு நின்று கொண்டிருந்தது.
இதனையடுத்து பயணிகளுடன் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து நிறுத்தப்பட்ட பின்னர் பேருந்தை எடுப்பதற்கு தாமதமான நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநர் கணேசனிடம் கேட்டபோது மேலாளர் கூறினால் மட்டும்தான் பேருந்து எடுத்துச் செல்ல முடியும் எனக் கூறியுள்ளார்.
பின்னர் பயணிகள் நேரடியாக ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் இருந்த
போக்குவரத்து உதவி மேலாளரிடம் பேருந்தை விரைவாக எடுக்குமாறு கூறிய போது ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுப்பது விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுப்பதற்கான நோட்டீஸ் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அதனால் வேறு பேருந்தில் செல்லுமாறு கூறியுள்ளார்.
அப்போது இதுபோன்ற திடீரென கூறினால் நாங்கள் எப்படி செல்வது என பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது நீங்கள் என்ன முன்பதிவு செய்தீர்களா? நீங்கள் இப்படி என்னிடம் வாக்குவாதம் செய்தால் நீங்கள் போகும் இடத்திற்கு செல்ல முடியாது என பயணிகளை இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து உதவி மேலாளர் பேசி வந்ததற்கு ஆதரவாக அருகில் உள்ள அதிகாரிகளும் பேசியதால் பயணிகளுக்கும் உதவி மேலாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த ஓட்டுநர் கணேசனை அதிகாரிகள் கடுமையாக திட்டியபடி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
அப்போது உதவி மேலாளர் மாரிமுத்து திடீரென ஓட்டுனர் கணேசன் தனது செருப்பால் அடித்து கோபத்தை வெளிப்படுத்தினார். நீ என்ன பயணிகளை வைத்து தூண்டி விடுகிறாயா? என கூறியபடி செருப்பால் அடித்த
நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு பேருந்து ஓட்டுநர்கள் சங்கத்தினரும் பயணிகளும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ஓட்டுநரை செருப்பால் அடித்த விவகாரத்தில் ஆரப்பாளையம் பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்துவை பணியிடம் நீக்கம் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குனர் இளங்கோவன் நடவடிக்கை எடுத்துள்ளார். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் இதுபோன்று அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்தினார்கள் மீது விசாரணை வரும்போது அதிகாரிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் பயணிகளை பேருந்து ஏற்றிவிட்டு காத்திருக்க வைக்க கூடாது எனவும் ஓட்டுனர்களும் போக்குவரத்து அதிகாரிகளுடைய உத்தரவை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் போக்குவரத்து நிர்வாக இயக்குனர் அறிவுறை கூறியுள்ளார்.
அதன் பின்னர் தற்போது துணை மேலாளர் மாரிமுத்து மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், “நான் நடந்து கொண்டது அரசுக்கும் போக்குவரத்து துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது, என்பதை முழுமையாக உணருகிறேன். அதேசமயம் நடந்த தவறுக்கு ஓட்டுநர் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பை கூறிக் கொள்கிறேன். நிர்வாகம் எடுக்கும் எத்தகைய முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன் என உறுதி அளிக்கிறேன்” என துணை மேலாளர் மாரிமுத்து கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டு உள்ளார்.