“2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்” - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி!
“2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக கட்சிகளை தவிர்த்து பிற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் பாட்டாளி
மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில், இவரை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :
“கச்சத்தீவு விவகாரத்தில் 1970-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் திமுக கச்சத்தீவை மீட்போம் என வாக்குறுதி அளிக்கும். ஆனால் நிறைவேற்றாது. நாங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் பிரதமரிடம் வலியுறுத்தி கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுப்போம்.
தொழிற்சாலைகளில் உள்ளூர் மக்களுக்கு 80% வேலை என்பது ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது. இன்னும் திமுக அரசு அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதுபோல் பல வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தவிர்த்து, பிற கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும்”
இவ்வாறி அன்புமணி தெரிவித்தார்.