போலி வீட்டு வசதி சொசைட்டியில் ரூ.200 கோடி மோசடி - பாதிக்கப்பட்டவர்கள் புகார்!
தமிழ்நாடு , கேரளாவில் வீட்டு வசதி சொசைட்டி எனும் பெயரில் ரூ. 200 கோடி முதலீடு பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் 2014 ஆம் ஆண்டு முதல் SMC கூட்டுறவு
வீட்டு வசதி சொசைட்டி எனும் பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் 33 கிளைகள், கேரளாவில் 7 கிளைகள் என 40 க்கும் மேற்பட்ட கிளைகள்
தொடங்கப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. 12 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படும்
இந்நிறுவனம் மாதந்தோறும் 15 சதவீத வட்டியுடன் கூடிய கவர்ச்சிகரமான முதலீட்டு
திட்டங்களை அறிவித்தது.
இதையும் படியுங்கள் : "போதைபொருள் நெட்வொர்க்" குறித்து ஜாபர் சாதிக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!
நிதி நிறுவனத்தின் வார்த்தையை நம்பி 12 ஆண்டுகளில் 40,000 க்கும் மேற்பட்டோர் ரூ. 200 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். மேலும், சொசைட்டியின் கிளை மேலாளராக பணியாற்றுவதற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை டெபாசிட் பெற்றுக் கொண்டதாகவும், டெபாசிட் மற்றும் முதலீட்டுத் தொகை உரிய காலத்தில் திருப்பி தராமல் மோசடி செய்தாக மதுரையில் 5க்கும் மேற்பட்ட கிளை நிறுவனங்கள் மூலம் பணம் செலுத்தி பாதிக்கப்பட்ட 30 க்கும் மேற்பட்டோர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் முதலீடு செய்த பணத்தை திருப்பி தருவதாக கூறிய நிறுவனத்தினர் தற்போது நிறுவனங்களை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டதாகவும், கடந்த சில மாதங்களாக நிறுவனத்தைச் சார்ந்தவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களிடம் பெறப்பட்ட பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.