முருகர் பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வாகனத்தில் வருவோருக்கு காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
முருகர் பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வருவோர், உரிய வாகன அனுமதி சீட்டு பெற்று வருமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , “மதுரை மாநகர் வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் வருகின்ற (ஜூன்.22) முருகர் பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணைப்படி வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அடையாளம் காணும் வகையில், ஒவ்வொரு மண்டலத்திலிருந்து வரும் வாகனத்திற்கும் தனித்தனி வண்ணங்களில் வாகன அனுமதி சீட்டு, அந்தந்த மாவட்ட, மாநகர காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.
மாநாட்டில் கலந்துகொள்ள இருப்பவர்கள், அந்தந்த துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் விண்ணப்பித்து, வாகன அனுமதி சீட்டை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணைப்படி 24 மணி நேரத்திற்குள் பெற்றுக் கொள்ளலாம். மேலும்
தென் மண்டல மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாநகரிலிருந்து வரும் வாகனங்களுக்கு பச்சை நிற அனுமதி சீட்டும் வழங்கப்படும்.
வடக்கு மண்டல மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ஆவடி, தாம்பரம் மற்றும் சென்னையிலிருந்து வரும் வாகனங்களுக்கு வெள்ளை நிற அனுமதி சீட்டும் வழங்கப்படும்.
மத்திய மண்டல மாவட்டங்களான திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் திருச்சி மாநகரிலிருந்து வரும் வாகனங்களுக்கு நீல நிற அனுமதி சீட்டு வழங்கப்படும்.
மேற்கு மண்டல மாவட்டங்களான கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர் மாநகர், சேலம் மாநகர், மற்றும் திருப்பூர் மாநகரில் இருந்து வரும் வாகனங்களுக்கு மஞ்சள் நிற அனுமதி சீட்டும், பிற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு சிவப்பு நிற அனுமதி சீட்டும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய அனுமதி சீட்டை கொண்டுள்ள வாகனங்கள் மட்டுமே மதுரை மாநகரில் நடைபெறும் முருகர் பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு மத்திய மண்டலம், வடக்கு மண்டலம், ஆவடி, தாம்பரம் மற்றும் சென்னையிலிருந்து வரும் வாகனங்கள் துவரங்குறிச்சி, மேலூர், ஒத்தக்கடை, சிவகங்கை ரோடு சந்திப்பு வழியாகவும், நத்தம் நான்கு வழி சாலையிலிருந்து கடச்சனேந்தல், ஒத்தக்கடை, உத்தங்குடி, பாண்டி கோவில் வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும்.
திண்டுக்கல், தேனி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாநகரிலிருந்து வரும் வாகனங்கள் சமயநல்லூர் பைபாஸ் ரோடு புதுக்கோட்டை சந்திப்பு, கூத்தியார் குண்டு, கப்பலூர் சந்திப்பு, நாகமலை பரம்புபட்டி, வலையங்குளம் சுங்கச்சாவடி, மண்டேலா நகர் சந்திப்பு, சிந்தாமணி சுங்கச்சாவடி வேலம்மாள் மருத்துவமனை, கல்லம்பல் பாலம், விராகனூர் சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும்.
கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாநகரிலிருந்து வரும் வாகனங்கள் திருமங்கலம், கப்பலூர் சந்திப்பு, பரம்புபட்டி, வளையங்குளம் சுங்கச்சாவடி, மண்டேலா நகர் சந்திப்பு, சிந்தாமணி சுங்கச்சாவடி வேலம்மாள் மருத்துவமனை, கல்லம்பல் பாலம், விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும்.
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர், எலியார்பத்தி சுங்கச்சாவடி,மண்டேலா நகர் சந்திப்பு, சிந்தாமணி சுங்கச்சாவடி வேலம்மாள் மருத்துவமனை, கல்லம்பல் பாலம், விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் திருமாஞ்சோலை, பூவந்தி, வரிச்சியூர், கருப்பாயூரணி, சிவகங்கை ரோடு சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வரும் வாகனங்கள் பார்த்திபனூர், மானாமதுரை, திருப்புவனம், சிலைமான், விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும்.
வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வரும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழியாக மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து, மாநாடு முடிந்த பிறகு அதே வழியிலேயே தங்களது மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் திரும்பிச்செல்ல வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.