“தமிழ்நாட்டில் கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம்” - அண்ணாமலை பேட்டி!
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை எனவும், கள்ளுக்கடைகளை திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியம் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா யோகா மையத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிஆர்பிஎப் வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“சர்வதேச யோகா தினத்தில் நாங்கள் பின்பற்றும் செய்தி, செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பது தான். ஏனென்றால் அது பலவிதமான மன பிரச்னைக்கு காரணமாக உள்ளது. சமூகவலைதளத்தில் இளைஞர்கள் மூழ்கி அடிமையாவது, தற்கொலை செய்வதற்கு வழிவகை செய்கிறது. யோகா மனதை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கிறது. இது கட்சி சாரதா நிகழ்வு என்பதால் ஈஷா யோகா மையத்தில் அரசியல் பேசவிரும்பவில்லை.
கள்ளச்சாரயம் சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது. கள்ளச்சாரயத்தை ஒழிப்பதற்கு நாம் தீர்வு காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். யோகா மூலம் குடி பழக்கத்திலிருந்து பலரை மீட்டெடுக்கலாம். இதை அரசு செய்தால் நன்றாக இருக்கும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லை. எனது மன அழுத்ததிலிருந்து மீண்டு எழ எனக்கு யோக முக்கியமாக இருக்கிறது. கள்ளுக்கடைகள் திறந்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமே.
பணம் அதிகம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் குடிப்பதில்லை. அவர்களை எப்படி நடுத் தெருவில் விடுவது. பாஜக ஏன் நேற்று உதவி செய்தோம் என்றால் அவர்களுக்கு குடும்பம் நடத்த முடியாத சூழல் உள்ளது. தமிழகத்தில் கள்ளுக்கடை கொண்டு வர வேண்டிய நேரம் இது. பூரண மதுவிலக்கு கொண்டு வர முயன்றால் அது பிரச்னையில் முடியும். கொஞ்சம் கொஞ்சமாக மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். கள்ளுக்கடை திறந்தாலும் அரசு கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்தால் நல்லது தான்”
இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.