“தேர்தலில் நான் போட்டியிடப் போவதாக எங்கும் சொல்லவில்லை” - அண்ணாமலை பேச்சு!
நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக எங்கும் சொல்லவில்லை என்றும், பிரதமர் மோடி கட்டளையிட்டால் அதை கேட்பேன் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :
“போதை பொருட்கள் கடத்தலை தடுக்க பிரதமர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். போதை பொருள் கடத்தல் சம்பந்தமாக 2013 ஆம் ஆண்டில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால் இன்று ஜாபர் சாதிக் டிஜிபியிடம் இருந்து விருது வாங்குகிறார். சினிமா எடுக்கிறார். 11 ஆண்டுகளில் போதைப் பொருட்கள் கடத்தல் மூலம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்துள்ள முதலமைச்சர், போதை பொருட்கள் கடத்தல் விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீமானுக்கு சின்னம் வேண்டுமென்றால் முதலில் அந்த சின்னத்தை கேட்டு விண்ணப்பித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டாம் என்று நானா கூறினேன். தொண்டர்கள் தான் சீமான் மீது கோபம் கொள்ள வேண்டும். முதலில் மோடியை திட்டினார். இப்போது அண்ணாமலையை திட்டுகிறார். பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். புதுச்சேரி போல தமிழ்நாட்டில் பாஜகவினர் பிரச்சாரத்திலோ அல்லது போஸ்டரிலோ முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படங்களை பயன்படுத்த மாட்டார்கள். அதற்கான தேவையும் இல்லை. அவர்களது புகைப்படங்களை பயன்படுத்தியது தொடர்பாக புதுச்சேரி பாஜகவை தான் கேட்க வேண்டும். ஆனால் இந்த மண்ணை ஆண்ட மூத்த தலைவர்களான எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு முழு அதிகாரம் பிரதமருக்கு உண்டு.
திருச்சியில் ஐஜேகே கட்சியின் சார்பில் நடந்த பொதுகூட்டத்தில் கூட்டம் வராததற்கு பாஜக காரணமில்லை. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக நான் எங்கும் சொல்லவில்லை. இந்த தேர்தலில், பாஜக 39 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஒருங்கிணைப்பு பணியை மட்டும் தான் மேற்கொள்கிறேன். ஆனால் மோடி என்ன கட்டளையிட்டாலும் நான் கேட்பேன்”
இவ்வாறு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.