“தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க அனுமதிக்க மாட்டேன், அதற்காக சிறை செல்லத் தயார்” - மம்தா பானர்ஜி பேச்சு!
மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் (SSC) அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்திற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு 24,640 காலியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 23 லட்சம் பேர் போட்டியிட்டனர். ஆனால், அதிர்ச்சியூட்டும் வகையில் 25,753 நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
எனவே இந்த விவகாரத்தில் உள்ள முறைகேடுகள் குறித்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்குத் தொடுத்தது, இது இறுதியில் இந்த நியமனங்களை ரத்து செய்ய வழிவகுத்தது. ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு உட்பட பல தரப்பினரால் கொலகத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்பு இந்த வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது, ஏற்கெனவே கொல்கத்தா உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்பை உறுதி செய்தது.
இந்த நிலையில் கொல்கத்தாவில் நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் இன்று(ஏப்ரல்.07) நடைபெற்ற கூட்டத்தில் நியமன ரத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்மாநில முதலமைச்சர் மம்தா மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் பேசியதாவது, “பள்ளிகளில் வேலை இழந்தவர்களுக்கு நான் துணை நிற்கிறேன். அவர்களின் கண்ணியத்தை மீட்டெடுக்க நான் எல்லாவற்றையும் செய்வேன்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மாநில அரசு கட்டுப்பட்டுள்ளது. ஆனால், நியாயத்துடன் கையாளப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுப்போம். தகுதியுள்ளவர்கள் வேலைகளை இழக்க நான் அனுமதிக்க மாட்டேன். பள்ளி வேலைகளை இழந்தவர்களுடன் நின்றதற்காக என்னை தண்டிக்க விரும்பினால், நான் சிறைக்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன்”
இவ்வாறு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.