"வரும் 5ம் தேதி செய்தியாளர், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளேன்" - செங்கோட்டையன் பேட்டி!
கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இல்லத்திற்கு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று என்னால் வர இயலவில்லை. வரும் 5ம் தேதி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் நான் கலந்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி செங்கோட்டையன் தொடர்ந்து பேசி வருவார் எனவே அவர் கட்சி நலன் கருதி நல்ல முடிவு எடுப்பார். அதிமுகவில் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், நான் சாதாரண தொண்டர், அவர்தான் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "செப்டம்பர் 5ம் தேதி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர், பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளேன். அன்றைய தினம் விளக்கமாக பேசுகிறேன் என்றார்.
மேலும் நேற்று நான் யாரையும் அழைக்கவில்லை, அவர்களாகவே வந்துள்ளனர். ஐந்தாம் தேதி உங்களுக்கே தெரியும். என்னுடைய கருத்தை தொண்டர்களின் கருத்தாக பிரதிபலிக்க போகிறேன். இன்றைய தினம் எந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை, திருமண நிகழ்ச்சிக்காக செல்கிறேன் என தெரிவித்துள்ளார்.