“நான் இன்னும் மோசமான சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்!” - ஜி.என்.சாய்பாபா வேதனை
10 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் தற்போதும் சிறையில் இருப்பதாகவே உணர்கிறேன் என மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிலிருந்ததாக கூறி தண்டிக்கப்பட்ட ஜி.என். சாய்பாபாகூறியுள்ளார்.
மாவோயிஸ்ட்களுடன் ஜி.என். சாய்பாபாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், கட்ச்ரோலி மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்களை வன்முறைக்கு தூண்டியதாகவும் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சாய்பாபா குற்றவாளி என குற்றம் சாட்டிய கட்ச்ரோலி செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2017ம் ஆண்டு அவர் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதை எதிர்த்து சாய்பாபா தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினய் ஜோஷி மற்றும் வால்மீகி எஸ்.ஏ.மெனேசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “விதிகளை மீறி கட்ச்ரோலி செஷன்ஸ் நீதிமன்றம் நடத்திய விசாரணை நீதியின் தோல்விக்குச் சமம். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமான ஆதராங்களை நிறுவ அரசுத்தரப்புத் தவறி விட்டது. எனவே, முந்தைய தீர்ப்பினை ரத்து செய்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.
மேலும், குற்றம்சாட்டப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாவோயிஸ்ட்கள் தொடர்புடைய சில துண்டு பிரசுரங்கள் மற்றும் மின்னணு தகவல்கள் அவர் மாவோயிட் அனுதாபி என்பதையே காட்டுவதாக உயர்நீதிமன்ற அமர்வு குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.என். சாய்பாபா கூறியதாவது:
சிறையில் அனுபவித்த வேதனைகளை நினைவு கூர்ந்த அவர், 10 வருடங்கள் சிறையில் இருந்து தற்போது விடுதலையான போதும், சிறையில் இருப்பது போன்றே தற்போதும் உணர்கிறேன். நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்று இன்னும் பதிவு செய்ய முடியவில்லை. நான் இன்னும் மோசமான சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்.
தொடர்ந்து பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளில் தனது குடும்பம் என்ன அனுபவித்தது என்பதைப் பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். பின்னர், என் மீது போடப்பட்ட வழக்கை எதிர்த்து போராடியதற்காக எனது வழக்கறிஞர்களுக்கு நன்றி. அதற்காக எந்த கட்டணமும் கேட்காமல் எனக்காக போராடினார்.
தனக்கு ஆதரவாக இருந்ததால் என்னுடைய மற்றொரு வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணையின் போது, குறிப்பிட்ட சில போலீஸ் அதிகாரிகள் எனது வழக்கறிஞர்களை மிரட்டினர்.
இதனை அடுத்து அவரது குடும்பத்தைப் பற்றி பேசுகையில், அவர்கள் நம்பிக்கையில் மட்டுமே உயிர் பிழைத்தனர். எனது குடும்பம் களங்கத்தை எதிர்கொண்டது, நான் பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டேன் என்று அவர் கண்ணீருடன் கூறினார்.