"நான் சொன்னதாக தவறான செய்தியை பரப்பிய ஊடகங்களை கண்டிக்கிறேன்" - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சி தேமுதிக கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை கேப்டன் சார்பிலும் தேமுதிக சார்பிலும் மணமக்களை வாழ்த்தினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "என்னுடைய தேமுதிக சார்பில் நடைபெறும் "உள்ளம் தேடி இல்ல நாடி" என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் இரண்டாம் கட்ட பயணம் வருகின்ற ஐந்தாம் தேதி தொடங்கி செப்டம்பர் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பு செய்வேன் என்று கூறினார். மேலும் பேசியவர், நான் சொல்லாதது செய்தியாக வருகிறது. அதை நான் கண்டிக்கிறேன். நான் சொல்வதை தவறாக செய்தியாளர்கள் போடுகிறார்கள். எங்கள் கட்சி நிர்வாகிகள் இடம் பேசுவதை நான் பேசியதாக போடுவது தவறு.
எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்தி விட்டார் என நான் சொல்லாததை அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளன. இவை அனைத்தும் முற்றிலும் தவறான செய்தி. நான் அப்படி ஒரு தகவலை சொல்லவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிக்குள் பேசுவதை, நீங்கள் நான் பேசியதாக போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. தேமுதிக சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன். இப்படி நான் சொல்லாததை சொல்வதாக நீங்கள் செய்தி வெளியிட்டால் இனி பத்திரிக்கையாளர்களை சந்திக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.