For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்”... மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பெருகும் ஆதரவு!

07:26 PM Dec 08, 2024 IST | Web Editor
“இந்தியா கூட்டணிக்கு தலைமையேற்க தயார்”    மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பெருகும் ஆதரவு
Advertisement

இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க தயார் என மம்தா பானர்ஜி கூறிய நிலையில், அவருக்கு சரத் பவார், உதைய்வீர் சிங், எம்பி சுப்ரியா சுலே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்க்க மக்களவை தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. ஆனால் தற்போது வரை இந்த கூட்டணி தலைமை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பல மாநிலங்களின் முதலமைச்சர்களும், இந்தியாவின் முக்கிய கட்சிகளின் தலைவர்களும் கூட்டணியில் இருப்பதால் தலைவரை தேர்ந்தெடுப்பது சிக்கலாக இருந்து வருகிறது. கூட்டணிக்கு தற்போது வரை ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே உள்ளனர். கூட்டணிக்குள்ளேயே முரண்பாடுகளும் உள்ளன.

இந்தியா கூட்டணியில் இருந்தாலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இந்நிலையில் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்க தயாராக இருப்பதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார். இதுகுறித்து மம்தா பானர்ஜி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்;

“இந்தியா கூட்டணியை உருவாக்கினேன். அதனை முன்னின்று நடத்துபவர்களால் அதனை நடத்த முடியாவிட்டால் நான் என்ன செய்ய முடியும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். வாய்ப்பு கொடுத்தால் இந்தியா கூட்டணியை சிறப்பாக நடத்துவேன். நான் மேற்கு வங்கத்தைவிட்டு வெளியில் செல்ல விரும்பவில்லை. மேற்கு வங்கத்தில் இருந்து கொண்டு என்னால் இந்தியா கூட்டணியை வழி நடத்த முடியும்'' என தெரிவித்தார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜியின் முடிவை வரவேற்பதாக சமாஜ்வாடியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.

சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் உதைய்வீர் சிங் இது குறித்து கூறுகையில், “மம்தா பானர்ஜி மூத்த தலைவர். அவருக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. அவரால் இந்தியா கூட்டணியை நடத்தமுடியும். அவரது தலைமையில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தியா கூட்டணி தலைவர்கள் ஒன்று சேர்ந்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்து முடிவு செய்யவேண்டும். மம்தா பானர்ஜியை இந்தியா கூட்டணி தலைவராக தேர்ந்தெடுத்தால் எங்களது கட்சி ஆதரவு கொடுக்கும்'' என்றார்.

இதுகுறித்து சரத் பவார் கூறியதாவது;

"நாட்டில் உள்ள திறமையான தலைவர்களில் அவரும் ஒருவர். அதனைச் சொல்வதற்கு அவருக்கு உரிமை உள்ளது. நாடாளுமன்றத்துக்கு அவர் அனுப்பியிருக்கும் எம்பிக்கள் கடின உழைப்பாளிகள், விழிப்புணர்வு உடையவர்கள்" என்றார். மேலும் எம்பி சுப்ரியா சுலேவும் எதிர்க்கட்சி கூட்டணிக்கு  திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் பொறுப்பேற்றால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என தெரிவித்துள்ளார். மேலும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா பிரிவும் ஆதரவு அளித்துள்ளது.

ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணியை வழிநடத்த ஒரு வலுவான தலைவர் தேவை என கடந்த சில நாட்களாகவே பேச்சு எழுந்து வருகிறது. இந்நிலையில் மம்தா பானர்ஜி இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement