இன்று மீண்டும் ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி. காலம் தாழ்த்துவதாக அரசு தரப்பில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் தொடர்பாக ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு நிழுவையில் இருந்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் நிலுவையில் இருந்த 4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். தொடந்து அந்த 18 மசோதாக்க்களில் இருந்து மாற்று திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவது தொடர்பான 2 மசோதாக்களுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் இன்று(ஜூலை.13) அண்டை மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டால் அதற்கு குண்டாஸ் வழக்கு தொடருவதற்கான மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் வழங்கப்படுவது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த மசோதாவின்படி, கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும். கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.